செய்திகள்

ஆந்திர மக்களின் நலனுக்காக எந்த தியாகத்துக்கும் தயார் - சந்திரபாபு நாயுடு

ஆந்திர மக்களின் நலனுக்காக எந்த தியாகமும் செய்ய தயாராக இருப்பதாக ஆந்திர முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

மாலை மலர்

குண்டூர்:

மத்திய பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் தெலுங்கு தேசமும் ஒன்று.

கடந்த 1-ந்தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது. இதில் ஆந்திர மாநிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை. போதிய நிதியை ஒதுக்கவில்லை. இதனால் ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் தலை வருமான சந்திரபாபு நாயுடு கடும் அதிருப்தி அடைந்தார்.

ஆனாலும் பா.ஜனதா கூட்டணியில் நீடிப்பதாக அவர் அறிவித்தார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மத்திய பா.ஜனதா கூட்டணி அரசுக்கு மார்ச் 5-ந்தேதி வரை தெலுங்கு தேசம் கெடு விதித்து இருந்தது.

இந்த நிலையில் ஆந்திர மக்களின் நலனுக்காக எந்த தியாகமும் செய்ய தயாராக இருப்பதாக சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

குண்டூர் மாவட்டத்தில் ஜே.என்.டி.யூ. கல்லூரியின் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் இதை தெரிவித்தார். இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-

கடந்த 4 ஆண்டுகளில் மத்திய மந்திரிகளை சந்திப்பதற்காக 29 முறை டெல்லிக்கு சென்றேன். ஆனால் மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு கூட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றியாக வேண்டும்.

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு இந்த மாநிலத்துக்காக மத்திய அரசு இதுவரை செய்தது என்ன? இது தொடர்பாக விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

ஆந்திர மாநிலம் விவேகத்துடன் பிரிக்கப்பட்டு இருந்தால் தற்போதைய பிரச்சினை எதுவும் வந்து இருக்காது. செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவித்து வருகிறோம். நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். ஆந்திர மக்களின் நலனை பாதுகாப்பதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம்.

இந்த சூழலை பயன்படுத்தி சிலர் (ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்) ஆந்திர அரசை விமர்சித்து அரசியல் ஆதாயம் அடைய முயல்கிறார்கள். ஒரு சிலரே (நடிகர் பவன் கல்யாண்) மத்திய அரசு அளித்த நிதி உதவிக்கு செலவு கணக்கை கேட்கிறார்கள்.

எனவே ஆந்திரபிரதேச மறுசீரமைப்பு கூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளையும், சமீபத்தில் டெல்லி மேலவையில் அளித்த வாக்குறுதிகளையும் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார். #tamilnews