பிரதமர் மோடி இன்று மாலை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு வருகை தர உள்ளார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
பாஜக 5 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்து, ஆந்திராவிற்கு வழங்கிய ஒரு வாக்குறுதியை கூட சரிவர நிறைவேற்றவில்லை. நான் 29 முறை டெல்லிக்கு சென்று தங்களை சந்தித்து, ஏராளமான மனுக்களை ஆந்திர மக்களின் சார்பாக அளித்துள்ளேன். இது குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மக்கள் உங்கள் ஆட்சியின் துரோகம், ஊழல், ஏமாற்றுதல் ஆகியவற்றில் சிக்கி தவித்து வருகின்றனர். ஆந்திர மக்கள் நடத்திய உரிமை போராட்டம் குறித்தும் பாஜக அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்களுடன் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு வரும்போது, நான் கருப்புச் சட்டை அணிவேன். என்னுடன் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து , கருப்புக் கொடி ஏந்தி எங்கள் எதிர்ப்பினை காட்டுவோம்.