செய்திகள்

ஆந்திராவிலும் பொங்கலுக்கு இலவச வேட்டி - சேலை: சந்திரபாபுநாயுடு அரசு முடிவு

தமிழகத்தை போல், ஆந்திராவிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்க சந்திர பாபுநாயுடு அரசு முடிவு செய்து இருக்கிறது.

நகரி:

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி- சேலை வழங்கப்படுகிறது. இதேபோல் ஆந்திராவிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்க சந்திர பாபுநாயுடு அரசு முடிவு செய்து இருக்கிறது.

ஆந்திராவில் பொங்கல் பண்டிகைக்கு ரே‌ஷன் கடைகள் மூலம் அரிசி, வெல்லம், போன்ற பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. வரும் பொங்கல் பண்டிகையில் இருந்து இலவச வேட்டி- சேலைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகிறது. சுமார் 75 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுகிறார்கள்.

இதுகுறித்து அமராவதியில் நடந்த கைத்தறி தின விழாவில் கலந்து கொண்ட மந்திரி அச்சம் நாயுடு கூறுகையில், வரும் பொங்கல் பண்டிகையில் இருந்து ஏழைகளுக்கு இலவச வேட்டி- சேலை வழங்கப்படுகிறது. இதற்காக நெசவாளர்களிடம் இருந்து கைத்தறி துணிகள் கொள்முதல் செய்யப்படும். நெசவாளர்கள் விற்றது போக மீதமுள்ள கைத்தறி துணிகள் இலவச வேட்டி- சேலைகளுக்காக வாங்கப்படும் என்றார்.