செய்திகள்

பா.ஜ.க.வுடன் சந்திரபாபு நாயுடு ரகசிய கூட்டணி வைத்துள்ளார் - ஒய்.எஸ்.ஆர்.காங் விமர்சனம்

பா.ஜ.க.வுடன் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக அம்மாநில எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. #ChandrababuNaidu

ஐதராபாத் :

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க தலைவர்களுடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளார் என ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சத்தியநாரயணா இன்று விமர்சனம் செய்துள்ளார். ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறிய பிறகும் பா.ஜ.க தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு, ரகசிய கூட்டணி வைத்துள்ளார். அதன் காரணமாகவே மத்திய அரசின் பல மக்கள் விரோத திட்டங்களை விமர்சனம் செய்யாமல் அவர் மௌனம் காத்துவருகிறார்.

சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மந்திரிகள் அனைவரும் எதிர்க்கட்சி தலைவர் ஜகன் மோகன் ரெட்டியை விமர்சிப்பதிலேயே கவனமாக உள்ளனர். ஆனால், நான்கு வருடம் மத்திய அரசில் அங்கம் வகித்துவிட்டு தற்போது கூட்டணியை விட்டு விலகிய அவர்கள், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல் மாநில நலனுக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க அரசின் மீது குற்றச்சாட்டுக்களை வைக்காமல் மௌனமாக உள்ளது ஏன் ? இதுகுறித்து சந்திரபாபு நாயுடு விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #ChandrababuNaidu