2-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாள் ஆட்டத்திற்கு இலங்கை வீரர்கள் களம் இறங்க தயாராக இருந்த நிலையில், போட்டி நடுவர்கள் இலங்கை நிர்வாகத்திடம் 2-வது நாள் ஆட்டத்தின்போது இலங்கை அணி (கேப்டன் சண்டிமல்) பந்தை சேதப்படுத்தியுள்ளது. இதனால் வேறு பந்துடன் நீங்கள் பந்து வீச வேண்டும் என்று கூறினார்கள்.
இதற்கு இலங்கை அணி கேப்டன் சண்டிமல், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா, மானேஜர் அசங்கா குருசிங்கா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் களம் இறங்க மறுத்துவிட்டனர்.
சுமார் ஒன்றரை மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் இலங்கை வீரர்கள் களம் இறங்கினார்கள். சண்டிமல் மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக போட்டி நடுவர் அவருக்கு 100 சதவிகித அபாரத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதித்தார். இதை எதிர்த்து சண்டிமல் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில் 3-வது நாள் காலையில் ஒன்றரை மணி நேரம் களம் இறங்காதது ஐசிசியின் விதிமுறையை கடுமையாக மீறியதாக மூன்று பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.