செய்திகள்

தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். #NortheastMonsoon #Rain

மாலை மலர்

தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதம் 21-ந் தேதி முடிவடைந்தது. அதன்பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 1-ந் தேதி தொடங்கியது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

தூத்துக்குடி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழையோ மிக கனமழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் அதிகபட்சமாக 29 செ.மீ. மழை பெய்துள்ளது.

மழை அளவு (செ.மீ. )வருமாறு:-

சாத்தான்குளம் - 22
பாபநாசம் - 16
திருச்செந்தூர் - 11
காட்டுமன்னார்கோவில் - 10

இதற்கிடையே தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இந்த தாழ்வு பகுதி புயல் சின்னமாகவும் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NortheastMonsoon #Rain