செய்திகள்

திரையரங்குகளில் தேசிய கீதம் - கட்டாயமாக்குவதை நிறுத்த மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு

திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் கட்டாயமாக்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்த உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது. #nationalanthemintheatre #centralgovernment

புதுடெல்லி:

திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று ஒரு மனுதாக்கல் செய்தது. அதில், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்கிற உத்தரவை மாற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. தேசிய கீதத்தை இசைப்பது தொடர்பான வழிமுறைகளை அமைச்சரவை குழு உருவாக்கும் வரை இதனை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் இந்த குழுவை அமைத்து வழிமுறைகளை உருவாக்க 6 மாதங்கள் வரையில் ஆகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கீதம் தொடர்பான பொதுநல வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #nationalanthemintheatre #centralgovernment #tamilnews