கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். இதனால் வங்கியில் வாங்கிய பயிர் கடன்களை செலுத்த முடியாமல் அவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து மாநில அரசு, வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர் மட்ட குழு கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இதில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வேளாண் அமைச்சர் ராதாமோகன் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, கடந்த ஆண்டு பாதிப்படைந்த கர்நாடக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியில் இருந்து 795 கோடி ரூபாய் அளிப்பது என அறிவிக்கப்பட்டது.