செய்திகள்

மத்திய அரசு ஊழியர் கொலை: காதலியின் கணவர் கைது

செங்குன்றம் அருகே மத்திய அரசு ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய காதலியின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செங்குன்றம்:

செங்குன்றத்தை அடுத்த சென்றம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அற்புதராஜ். பெயிண்டர்.

இவரது மனைவி சசிகலா. 2 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகுமார் (28) தேசிய அளவிலான கால்பந்து வீரர்.

இவர் மணலியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சி.பி.சி.எல்.லில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அற்புத ராஜ் மனைவி சசிகலாவுக்கும், ஹரி குமாருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதையறிந்த அற்புதராஜ் ஹரிகுமாரிடம், தனது மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடுமாறு எச்சரித்தார். ஆனால் ஹரிகுமார் தொடர்ந்து சசிகலாவுடன் பழகி வந்தார். இதனால் அற்புதராஜ் கடும் ஆத்திரத்தில் இருந்தார்.

கடந்த 25-ந்தேதி அற்புத ராஜ் தனது உறவினர், வசீந்தருடன் ஹரிகுமார் வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த ஹரிகுமாரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார்கள்.

இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அற்புதராஜ் வசீந்தர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

அப்போது வீட்டுக்கு வந்த ஹரிகுமாரின் தாய், மகன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஹரிகுமாரை ஆம்புலன்சில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு ஹரிகுமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அற்புதராஜ், வசீந்தர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

போலீசாரிடம் அற்புத ராஜ் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலை கைவிடுமாறு ஹரிகுமாரை எச்சரித்தேன். ஆனால் அவர் கைவிடவில்லை.

சம்பவத்தன்று மனைவி செல்போனில் பேசி கொண்டிருந்தாள். உடனே செல்போனை வாங்கி பார்த்தபோது ஹரிகுமாரின் எண் இருந்தது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த நான் அவரை இரும்பு கம்பியால் தாக்கினேன் என்று கூறி உள்ளார்.

SCROLL FOR NEXT