சென்னை:
மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாஸ்போர்ட் வழங்கும் முறைகளை எளிமைப்படுத்தி மத்திய வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி உடனடியாக பாஸ்போர்ட் பெற உதவும் தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு மற்றும் பாஸ்போர்ட் வழங்கியபின் போலீசாரின் சரிபார்த்தலை மேற்கொள்ளும் திட்டத்திலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:-
இணைப்பு படிவம்
திருத்தப்பட்ட தட்கல் பாஸ்போர்ட் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பவர்கள் அரசு உயர் அதிகாரிகள் வழங்கும் உறுதி சான்றிதழை (வெரிபிகேஷன் சர்ட்டிபிகேட்) விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் எண், ஆதார் மின்னணு பதிவு அட்டை மற்றும் இணைப்பு படிவம் - E ஆகியவற்றுடன், குறிப்பிடப்பட்டுள்ள 12 ஆவணங்களில் ஏதேனும் 2 ஆவணங்களை மட்டும் சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெறலாம்.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பாரா 2 (பி)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஓர் ஆவணத்தை சமர்ப்பித்து தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெறலாம். இணைப்பு படிவம் E -யை tp.//www.passportlndla.gov.ln/ AppOnltneProlecUpdf/AnnexureE.pdf எனும் முகவரியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள 2-வது திட்டம் ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சகம் 2016-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி அரசிதழில் வெளியிட்ட ஆணையை மாற்றி அமைக்கிறது. இதன்படி முதல் முறை பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் கூடுதல் தட்கல் கட்டணம் செலுத்தாமல் பாஸ்போர்ட் பெறுவதற்கு தங்களின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, குடும்ப அட்டை ஆகியவற்றுடன் இணைப்பு படிவம் E -யை வழங்கி பெற்றுக் கொள்ளலாம்.
போலீசார் சரிபார்க்கும் நடவடிக்கை பின்னர் மேற்கொள்ளப்படும். அவர்கள் சாதாரண முறையிலேயே விண்ணப்பிக்கலாம். தட்கல் முறையில் விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #tamilnews