நாம் சாப்பிடும் உணவு தானியங்களிலேயே கம்பு அதிக சத்து கொண்டதாகும். ஆனால் ஒருசில பகுதி மக்கள் மட்டும் தான் கம்புவை விரும்பி சாப்பிடுகிறார்கள். இது முக்கிய உணவாக மாறவில்லை.
கம்பு உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதிக நாட்கள் உயிர் வாழலாம். மேலும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தும் குணமும் இதற்கு உண்டு. அதிக இரும்பு சத்தும் கம்புவில் உள்ளது.
எனவே மத்திய அரசு ரேஷன் கடைகளில் மக்களுக்கு கம்புவை வினியோகிக்க திட்டமிட்டு இருக்கிறது. இது சம்பந்தமாக மத்திய விவசாயத்துறை செயலாளர் பட்நாயக் கூறியதாவது:-
வேறு எந்த உணவு தானியத்திலும் இல்லாத சத்து கம்புவில் இருப்பதால் அவற்றை சாப்பிடும் பழக்கத்தை மக்களிடம் அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி ரேஷன் கடைகளில் கம்புவை வினியோகிக்க முடிவு செய்திருக்கிறோம். தற்போது கம்பு விளைச்சல் குறைவாகவே உள்ளது. அதிக உற்பத்தியை கொடுக்கும் கம்பு ரகமும் இல்லை. எனவே புதிய வீரிய கம்பு ரகங்களை அறிமுகம் செய்து கூடுதல் உற்பத்திக்கு ஏற்பாடு செய்யப்படும்.
மேலும் மாநில அரசுகள் கம்பு தானியத்தை மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம். மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தில் கம்புவை முக்கிய உணவு பொருளாக சேர்க்கும் திட்டமும் உள்ளது.
கம்பு உணவை அதிகம் சாப்பிட்டால் தொற்று நோய்கள் பரவுவது தடுக்கப்படும். நீரிழிவு, மன அழுத்தம், இதய நோய்கள், புற்று நோய் போன்றவையும் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.