தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் டெல்லியில் நேற்று மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரத்தோரை சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
செஸ் போட்டியில் மிகச்சிறிய வயதில் கிராண்ட் மாஸ்டராகி தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சென்னை சிறுவன் பிரக்ஞானந்தாவும், அவருடைய அக்காவும் பெற்ற பதக்கங்களின் பட்டியலை மத்திய விளையாட்டுத்துறை மந்திரியிடம் எடுத்துரைத்தேன்.
அந்த சிறுவர்களுக்கு நான் அளித்த ஊக்கத்தை மத்திய அரசும் தரும் என்று கூறிய மத்திய மந்திரி, விளையாட்டு வீரர்கள் மீது தனிக்கவனம் செலுத்த பிரதமர் கூறியிருப்பதால் அந்த அக்கா-தம்பிக்கு பரிசு, பயிற்சி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். ஊக்கத்தொகை ரூ.10 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்பது எனது கணிப்பு.