பயனற்ற ஆழ்துளை கிணறு 
செய்திகள்

பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட மத்திய குழந்தை பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

நாடு முழுவதும் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து உடனடியாக மூடுவதற்கு மத்திய குழந்தை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் பயனற்ற ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க 4 நாட்களாக போராடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்கனூங் உத்தரவின் பேரில் ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் நடுக்காட்டுப்பட்டிக்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் இந்த சம்பவம் பற்றி ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினார்.

இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. இதுபற்றி டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் கூறியதாவது:-

மனித தவறுகளால் நிகழும் இந்த மாதிரி சம்பவங்கள் உடனே தடுக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் இந்த மாதிரி பல சம்பவங்கள் நடந்துள்ளன. இனியாவது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கான முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக கலெக்டர்கள் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து உடனடியாக மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இனிமேல் நாட்டில் எந்த பகுதியிலும் இந்த மாதிரி சம்பவங்கள் நடக்க கூடாது என்பதில் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT