செய்திகள்

செல்போன் பேசியபடி வாகனம் இயக்கிய 2 டிரைவர்களின் லைசென்ஸ் உரிமம் ரத்து - ஆர்டிஒ அதிரடி நடவடிக்கை

பெரம்பலூர் பகுதியில் செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கிய 2 டிரைவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.

மாலை மலர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி டிரைவர் செல்போன் பேசிக் கொண்டு இயக்கி வரப்பட்ட லாரியை பறிமுதல் செய்தனர். அதேபோல் டிரைவர் செல்போன் பேசிக் கொண்டும் பொதுமக்களை ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 2 வாகனங்களுக்கும் தலா ரூ. 5,500 அபாரதம் விதிக்கப்பட்டது.

மேலும் அந்த வாகனங்களை இயக்கி கொண்டு செல்போன் பேசி வந்த 2 டிரைவர்களின் லைசென்ஸ் உரிமம் தற்காலிமாக 3 மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் கூறுகையில், வாகன ஓட்டுநர்கள் கண்டிப்பாக போக்குவரத்து விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும். அதனை மீறும் போது தான் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதில் குறிப்பாக செல்போன் பேசிக்கொண்டு டிரைவர்கள் வாகனங்களை இயக்ககூடாது. அவ்வாறு மீறி இயக்கினால் அவர்களது லைசென்ஸ் உரிமம் ரத்து செய்யப்படும். தொடர்ந்து இந்த சோதனை நடைபெறும் என்றார்.