திருவட்டார்:
திருவட்டார் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரின் மகள் குளச்சல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவி, மாலையில் வீடு திரும்பி விடுவார். பின்னர் வீட்டில் இருந்து கடைகளுக்கு சென்றாலும் இரவுக்கு முன்பு வீட்டுக்கு வந்து விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
கடந்த 24-ந் தேதி வழக்கம் போல பள்ளிக்கு சென்ற மாணவி, மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன பெற்றோர், மாணவியை அக்கம் பக்கத்தில் தேடினர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவர்கள் இது குறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்தனர்.
திருவட்டார் பொறுப்பு இன்ஸ்பெக்டர் சிவசங்கரி, சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஆகியோர் மாணவி மாயம் என வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இதில் மாணவி, பள்ளிக்கு செல்லும் வழியில் கருங்கல் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அடிக்கடி சந்தித்து பேசுவது தெரியவந்தது. அந்த வாலிபர் அங்குள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். மாணவி மாயமான அதே நாளில் வாலிபரும் மாயமாகி இருந்தார்.
இதனால் அந்த வாலிபர் தான் மாணவியை கடத்தி சென்றிருக்க வேண்டும் என கருதிய போலீசார் அந்த வாலிபரை தேடினர். இதில் அவர் மறைந்திருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு சென்ற போலீசார், அந்த வாலிபரையும், மாணவியையும் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். மாணவியை வாலிபர் கடத்தி சென்றாரா? என்பது பற்றி அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.