செய்திகள்

குஜராத்தில் ஊருக்குள் சுற்றித் திரிந்த 12 சிங்கங்கள் - சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிப்பு

குஜராத் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் 12 சிங்கங்கள் சுற்றித் திரிந்தது சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

மாலை மலர்

காந்திநகர்:

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் புகழ் பெற்ற கீர் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் அதிக அளவில் ஆசிய சிங்கங்கள் உள்ளன.

இந்நிலையில் சரணாலயத்தில் இருந்து தப்பி வந்த 12 சிங்கங்கள், அருகில் உள்ள ராம்பாரா கிராமத்தில் கடந்த செவ்வாய் கிழமை இரவு தெருவில் சுற்றி திரிந்துள்ளன. சிங்கங்கள் செல்வது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அவை தெருவில் அங்கும் இங்கும் ஓடி விளையாடுகின்றன.

இது குறித்து வன அதிகாரிகள் கூறுகையில், ராம்பாரா கிராமம் வன விலங்கு சரணாலயத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது. சரணாலயத்தின் பாதி பகுதியில் ஆசிய சிங்கங்கள் உள்ளன. அவை இரை தேடி கிராமத்திற்குள் புகுந்திருக்கும். ஆனால் அவை எந்த சேதமும் ஏற்படுத்தாமல் சென்று விட்டன.

சிங்கங்கள் தெருவில் கால்நடை போல அலைவதை பார்த்த மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.