செய்திகள்

பூபேஷ்குமார் ஜெயின் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லாமல் தடுக்க லுக் அவுட் நோட்டீஸ்

14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் பூபேஷ்குமார் ஜெயின் வெளிநாட்டுக்கு தப்பி ஓடாமல் இருக்க அவருக்கு எதிராக சி.பி.ஐ லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

போலி ஆவணங்கள் மூலம் 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கி மோசடி செய்த தொழிலதிபர் பூபேஷ்குமார் ஜெயின் மற்றும் அவரது மனைவி நீடா ஜெயின், அவர்களின் கூட்டாளிகள், அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

அதோடு சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி வேட்டையிலும் நேற்று பிற்பகலில் ஈடுபட்டனர். சென்னையில் அவருக்கு சொந்தமான கனிஷ்க் தங்க நிறுவனம் மற்றும் வீடுகளில் இரண்டு நாட்களாக சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த சோதனையில் பல ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தெரிகிறது. பூபேஷ்குமார் ஜெயினும், அவரது கூட்டாளிகளும் வங்கிகளை எப்படி ஏமாற்றி மோசடி செய்தனர் என்பதற்கான ஆவணங்களும் கிடைத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, பூபேஷ்குமார் ஜெயின் வெளிநாட்டுக்கு ஏற்கனவே தப்பி ஓடிவிட்டதாக தகவல் பரவியது. ஆனால், சி.பி.ஐ அதிகாரிகள் அதனை மறுத்தனர். இந்நிலையில், பூபேஷ் குமார் மற்றும் அவரது மனைவி வெளிநாட்டுக்கு ஓடாமல் தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சி.பி.ஐ லுக் அவுட் நோட்டீஸ் விநியோகித்துள்ளது. #TamilNews #CBI