செய்திகள்

முறைகேடாக பங்குகள் விற்க உதவியதற்காக கார்த்தி சிதம்பரம் நிறுவனத்துக்கு ரூ.3½ கோடி: சி.பி.ஐ. அதிகாரிகள் விளக்கம்

முறைகேடாக பங்குகள் விற்க உதவியதற்காக கார்த்தி சிதம்பரம் நிறுவனத்துக்கு ரூ.3½ கோடி வந்துள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்

மாலை மலர்

ப.சிதம்பரம் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரிகள் கூறியதாவது:-

மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது 2-வது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் (ஷீனா போரா கொலை வழக்கில் கைதானவர்கள்) ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனத்தின் முதலீட்டை அதிகரிப்பதற்காக நிறுவன பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்துக்கு (எப்.ஐ.பி.பி.) விண்ணப்பித்தனர். அதைத் தொடர்ந்து ரூ.4 கோடியே 62 லட்சத்து 16 ஆயிரத்துக்கு பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய எப்.ஐ.பி.பி. அனுமதி கொடுத்தது. ஆனால் ஐ.என்.எக்ஸ். நிறுவனம் ரூ.305 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்தது.

இந்த மோசடி நடந்த காலத்தில் நிதி மந்திரியாக இருந்தவர் ப.சிதம்பரம். இந்திராணி முகர்ஜியுடன் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பலமுறை போனில் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஐ.என்.எக்ஸ். நிறுவனம் தனது பங்குகளை விற்று முடிந்த சில நாட்களில் கார்த்தி சிதம்பரம் நடத்திவரும் செஸ் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனத்துக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் வந்துள்ளது. முறைகேடாக நிறுவன பங்குகளை விற்க உதவி செய்ததற்காக இந்த தொகை வழங்கப்பட்டு இருக்கலாம்.