செய்திகள்

ராஜீவ் கொலை வழக்கு: வெடிகுண்டு குறித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சி.பி.ஐ.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு குறித்த விசாரணை அறிக்கையை சிபிஐ இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

மாலை மலர்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

ராஜீவ் காந்தியை கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தயாரிக்க பேட்டரி வாங்கி கொடுத்ததாக பேரறிவாளன் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு கடந்த 18-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்தியதாக கூறப்படும் வெடிகுண்டு குறித்து சி.பி.ஐ. முழுமையான விசாரணையை மேற்கொள்ளாதது ஏன்? என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது எப்படி என்பது குறித்த விசாரணை விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது. மேலும், இதுதொடர்பான விசாரணையை ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் தெரிவித்தது.