சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான வழக்கில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டது. மொயின் குரேஷி மீதான வழக்கை ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய தொழில் அதிபர் சதீஷ் சனாவை விடுவிக்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
அதன்பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையாக சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமாரை சி.பி.ஐ. கைது செய்தது. சதீஷ் சனாவின் வாக்குமூலத்தை பதிவு செய்வதில் மோசடி செய்ததாக அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சி.பி.ஐ. இயக்குனருக்கும், சிறப்பு இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவை தற்காலிக சி.பி.ஐ. இயக்குநராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 2 மணிக்கு அவர் பொறுப்பேற்றார்.
அதேசமயம், இயக்குனர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் செல்லலாம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.