செய்திகள்

காவிரி விவகாரம் - சுப்ரீம் கோர்ட் வளாக மரத்தில் ஏறி தமிழக விவசாயி போராட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்யாததையடுத்து, அதிருப்தி அடைந்த தமிழக விவசாயி ஒருவர் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். #CauveryIssue #FarmerProtest

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் செயல் திட்டத்தை 6 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எனினும், செயல் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கவில்லை. வரைவு செயல் திட்டத்தை உருவாக்கவும் உத்தரவிட்டு மே 3-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

அதன்படி இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இன்றும் வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்யவில்லை. மேலும் 10 நாட்களுக்கு மத்திய அரசின் வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் அவகாசம் கேட்டார்.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் கூடியிருந்த விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். அவர்களில் தட்சிணாமூர்த்தி என்பவர்  அங்கிருந்த மரத்தில் ஏறி, இறங்க மறுத்தார். தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அவர் கூறியதால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. பின்னர் அவரை போலீசார் மீட்டனர்.

விவசாயி தட்சிணாமூர்த்தியை தொடர்ந்து மேலும் சில விவசாயிகள் உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள மரங்களில் ஏறி போராட்டம் நடத்தினர்.  அவர்களை போலீசார் கைது செய்தனர்.  #CauveryIssue #FarmerProtest