பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்ற காட்சி. 
செய்திகள்

புதுவையில் வங்கி- பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் புகுந்து ரகளை

புதுவையில் இன்று நடந்த பந்த் போராட்டத்தின் போது வங்கி மற்றும் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் புகுந்து போராட்டக்காரர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி:

புதுவையில் இன்று நடந்த பந்த் போராட்டத்துக்கு சமூக, சமுதாய, ஜனநாயக அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருந்தன. இந்த அமைப்புகள் சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்களும் நடைபெற்றது.

அது போல் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சுதேச மில் அருகில் இருந்து அதன் தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலம் ரெட்டியார் பாளையம், கம்பன் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட நகரபகுதிகளுக்கு சென்றது. அப்போது திறந்து இருந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை பூட்டும்படி வங்கி முன்பு கோ‌ஷமிட்டனர். இதையடுத்து வங்கிகள் பூட்டப்பட்டது.

பின்னர் ஊர்வலம் இறுதியாக சின்னக்கடை அருகே வந்தது. அங்கு இயங்கிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அங்கிருந்த ஊழியர்களிடம் வங்கியை பூட்டும்படி கூறி கோ‌ஷமிட்டனர். இதையடுத்து வங்கியை ஊழியர்கள் பூட்டினர்.

அதே போல் பி.எஸ்.என்.எல். அலுவலகத்திலும் போராட்டக்காரர்களின் ஒரு பிரிவினர் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். #Tamilnews