ஸ்பெயின் நாட்டிடம் இருந்து பிரிந்து சுதந்திரம் பெறுவதற்கான பிரகடனம், கேட்டலோனியா பிராந்திய பாராளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த சூட்டோடு சூடாக அங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்த கார்லஸ் அரசை ஸ்பெயின் அரசு பதவியில் இருந்து அகற்றியது. கேட்டலோனியா, ஸ்பெயின் அரசின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட கார்லஸ், தனது மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த பலருடன் பெல்ஜியத்தில் உள்ளார். அதே நேரத்தில் அங்கு தான் அரசியல் புகலிடம் கேட்க செல்லவில்லை என்று கூறினார். இந்த நிலையில் அவர் மீதும், பதவி நீக்கம் செய்யப்பட்ட 13 மந்திரிகள் மீதும் தேசத்துரோகம், கிளர்ச்சி, அரசு நிதியை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர்கள் இந்த வாரம் நேரில் ஆஜராவதற்கு சம்மன் அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார்.