செய்திகள்

பாப்புலர் பிரண்டு ஆப் இந்தியா அமைப்பை தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி

பாப்புலர் பிரண்டு ஆப் இந்தியா அமைப்பை தடை விதிக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

ஐகோர்ட்டில், இந்து முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கோபிநாத் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு, தடை செய்யப்பட்ட சிபி அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளது.

இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மீது கேரளாவில் ஏராளமான வழக்குகள் உள்ளன. புனே குண்டு வெடிப்பு சம்பவம் உள்ளிட்ட பல சம்பவங்களிலும் தொடர்பு உள்ளன. எனவே இந்த அமைப்பை தடை செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி. ஆஷா ஆகியோர், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஒரு அமைப்பை தடை செய்வது என்பது ஐகோர்ட்டின் வேலை இல்லை. ஒரு அமைப்பை தடை செய்யவேண்டும் என்றால், மத்திய அரசை தான் மனுதாரர் அணுக வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #tamilnews