செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு- போலீசாரின் துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய ஐகோர்ட்டில் வழக்கு

தூத்துக்குடி கலவரத்தில் போலீசார் சூப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்திய துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #MaduraiHC #TTVDhinakaran #thoothukudifiring

மதுரை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஹென்றி தாமஸ் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கடந்த மாதம் 22-ந் தேதி நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள்.

போலீசார் திட்டமிட்டு இந்த சதி செயலை அரங்கேற்றியுள்ளனர். எனவே துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த சம்பவத்துக்கு காரணமான அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கு போலீசார் பயன்படுத்திய துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் பறிமுதல் செய்து பாதுகாப்பாக வைக்க உத்தரவிட வேண்டும்.

ஏனென்றால் துப்பாக்கிச் சூட்டின் உண்மை நிலை அந்த துப்பாக்கிகளின் மூலம் தான் தெரியவரும்.

மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதிகள் செல்வம், பசீர் அகமது ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீது விசாரணை மேற்கொண்ட அவர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்குகள் சென்னை, மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்குகளுடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர். #MaduraiHC #TTVDhinakaran #thoothukudifiring

SCROLL FOR NEXT