குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் 22 முஸ்லிம் அமைப்பினர் நேற்று ஈடுபட்டனர்.
ஐகோர்ட்டு தடையை மீறி நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கலைவாணர் அரங்கில் இருந்து சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் வரையில் பேரணியாக சென்றனர். சுமார் 20 ஆயிரம் பேர் வரையில் இதில் கலந்து கொண்டனர்.
காலை 10.30 மணி அளவில் தொடங்கிய போராட்டம் மதியம் 12.10 மணி அளவில் முடிவுக்கு வந்தது. சேப்பாக்கம் பகுதியே ஸ்தம்பிக்கும் அளவுக்கு நடைபெற்ற போராட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளும் போராட்டத்தில் கலந்து கெண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர், முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் 20 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “போராட்டத்தில் ஈடுபட்ட 1500 பெண்கள் உள்பட 10 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது” என்றார்.