புதுச்சேரி:
புதுவை நைனார்மண்டபம் பிரியதர்ஷினி நகர் முல்லை வீதியை சேர்ந்தவர் அய்யனாரப்பன். இவரது மகன் மணிபாரதி (வயது18). இவர் லாஸ்பேட்டையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும் நைனார்மண்டபம் நாகம்மன் நகர் ஜீவானந்தம் வீதியை சேர்ந்த இறைச்சிகடை ஊழியர் யோகேசுக்கும் (18) முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று யோகேஸ் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த கார்த்திக், சதீஷ், சந்தோஷ் ஆகியோரும் மணிபாரதி மற்றும் அவரது தரப்பை சேர்ந்த பசுபதி, சுந்தர், சண்முகசுந்தரம் ஆகியோரும் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் கையாலும், மரக்கட்டையாலும் மாறி மாறி தாக்கி கொண்டனர். மேலும் ஒருவருக்கொருவர் கொலை மிரட்டல் விடுத்து கொண்டனர்.
இந்த கோஷ்டி மோதலில் மணிபாரதி, யோகேஷ் ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியே முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இருதரப்பையும் சேர்ந்த 8 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.