பெரியபாளையம்:
வெங்கல் அருகே உள்ள திருகண்டலம் கிராமம் பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் எல்லாபுரம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இவரது தலைமையில் கடந்த 23-ந் தேதி திருக்கண்டலம் பூச்சி அத்துப்பேடு சாலையை சீரமைக்கக் கோரியும், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட கோரியும் திடீர் சாலை மறியல் நடந்தது.
மேலும் அவ்வழியாக வந்த லாரிகள் சிறை பிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெங்கல் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி கலைந்து போகச் செய்தனர்.
இந்த நிலையில் அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தினேஷ்குமார் உள்ளிட்ட 25 பேர் மீது வெங்கல்போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.