செய்திகள்

ஜோலார்பேட்டையில் சரக்கு ரெயிலில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயிலில் இருந்து மலைப்பாம்பை பிடிப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

ஜோலார்பேட்டை:

சென்னையில் இருந்து மேட்டூருக்கு 56 பெட்டிகளுடன் நிலக்கரி பாரம் ஏற்றி கொண்டு சரக்கு ரெயில் புறப்பட்டது.

அந்த ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தது. பின்னர் அந்த ரெயில் யார்டில் நிறுத்தப்பட்டது.

ரெயில்வே ஊழியர்கள் ரெயிலில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கார்டு பெட்டியில் இருந்து 8-வது பெட்டியில் 12 அடி நீள மலைப்பாம்பு இருந்ததை கண்டு ரெயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவனேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அங்கு வந்த வனசரகர் பரமசிவம் மற்றும் ஊழியர்கள் அந்த மலைப்பாம்பை பிடித்து, ஏலகிரிமலை காட்டில் விட்டனர்.

சரக்கு ரெயிலில் மலைப்பாம்பு இருந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.