செய்திகள்

8 லட்சம் ஆண்டில் இல்லாத அளவிற்கு கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரித்துள்ளது - ஐ.நா. எச்சரிக்கை

வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் (CO2) அளவு புதிய உயரத்தை எட்டியுள்ளது என ஐ.நா. சபை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

மாலை மலர்

ஜெனீவா:

உலகளவில் கடந்த 2016-ம் ஆண்டு கார்பன்-டை-ஆக்சைடின் அளவு சராசரியாக 403.3 பாகங்களை எட்டியது. இது 2015-ல் 400 பாகங்களாக இருந்தது. மனித நடவடிக்கைகள் மற்றும் வலுவான எல் நினோ நிகழ்வுகள் ஆகியவற்றின் காரணமாக இது அதிகரித்துள்ளது. 1750-ம் ஆண்டு முதல் தொழிற்துறை காலத்தில் வளிமண்டலத்தில் ஆபத்தான வாயுக்களின் உள்ளடக்கத்தை ஐ.நா வானிலை வாரியம்  கண்காணிக்கிறது.

கிரீன்லாண்ட் மற்றும் அண்டார்டிக்கா போன்ற இடங்களில் பனிக்கட்டிகளுக்குள் பாதுகாக்கப்பட்டிருக்கும் காற்று குமிழ்களைப் பயன்படுத்தி 8,00,000 ஆண்டுகளுக்கு முன்னர் காற்றில் இருந்த வாயுக்கள் குறித்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். புதைபடிவ பொருள்களை ஆராய்ந்து அதற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த அளவுகள் குறித்தும் கண்டறியப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த கண்டுபிடிப்புகளை வைத்து கடந்த மூன்று முதல் ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது உள்ளது போன்ற நிலை  இருந்துள்ளது என விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். அப்போது கடல் மட்டமானது, இப்போது உள்ளதைவிட 20 மீட்டர் உயரமாக இருந்திருக்கலாம் எனவும், வெப்பநிலையும் இப்போது இருப்பதைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்திருக்கலாம்  எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஐ.நா. சபை வெளியிட்ட அறிக்கையில், வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு கடந்த 8 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2016-ம் ஆண்டில் அதிகரித்துள்ளது. கார்பன்-டை-ஆக்சைட் மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவுகளை குறைக்கவில்லை எனில், இந்த நூற்றாண்டு முடிவதற்குள் பூமியின் வெப்பம் அதிகரித்து பேரழிவை சந்திக்க நேரிடும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைய கடுமையான நடவடிக்கைகள் தேவை என எச்சரித்துள்ளது.