செய்திகள்

தாராபுரம் அருகே கார் மீது லாரி மோதில்: தாய்- 2 குழந்தைகள் பலியான சோகம்

தாராபுரம் அருகே காரும், வேனும் மோதிக் கொண்டதில் தாய்- 2 குழந்தைகள் பலியானார்கள்.

மாலை மலர்

தாராபுரம்:

திருப்பூர் குறிச்சி நகர் ஷெரிப் காலனியை சேர்ந்தவர் ராமநாதன் (38). திருப்பூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யா (30). இவர்களுக்கு துவாரிகா (9) என்ற மகளும், நிதின் குமார் (5) என்ற மகனும் இருந்தனர்.

ராமநாதன் அண்ணன் கண்ணன் திண்டுக்கல் மாவட்டம் இடைய கோட்டையில் மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள ராமநாதன் தனது காரில் குடும்பத்தினருடன் திண்டுக்கல் சென்று கொண்டிருந்தார்.

தாராபுரம் அருகே இடையன் கிணறு என்ற இடத்தில் சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார். அப்போது எதிரே திருப்பூர் நோக்கி வந்த லாரி கார் மீது மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் ரோடு ஓரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது இந்த விபத்தில் காரில் இருந்த சத்யா, நிதின் குமார், துவாரிகா ஆகியோர் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்கள். ராமநாதன் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் தாயுடன் இரு குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.