செய்திகள்

திருச்செந்தூரில் கார் கண்ணாடியை உடைத்து திருட்டு: போலீசார் விசாரணை

திருச்செந்தூரில் கார் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், 2 செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

மாலை மலர்

திருச்செந்தூர்:

புதுக்கோட்டை மாவட்டம் லெட்சுமிநகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 39). இவர் நேற்று தனது நண்பர்களுடன் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். அவர்கள் சாமி கும்பிடுவதற்கு முன்பு அப்பகுதியில் உள்ள நாழிக்கிணறு பஸ் நிறுத்தம் அருகே காரை நிறுத்தி விட்டு கமலக்கண்ணன் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்றார்.

பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், 2 செல்போன்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து திருச்செந்தூர் கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக இது போன்று கோவிலுக்கு வரும் பக்தர்களின் கார் கண்ணாடியை உடைத்து தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே இதனை தடுக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.