செய்திகள்

ஆப்கானிஸ்தான் கார் குண்டு தாக்குதலில் 8 போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 8 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.

மாலை மலர்

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

இந்த படைகளுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் வான்வழியாக சென்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் நேற்று பின்னிரவு பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 8 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.

ராணுவத்துக்கு சொந்தமான காரை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள் அதில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பி கஸ்னி நகரில் உள்ள போலீஸ் தலைமையம் மீது மோத வைத்து இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.