உயிரிழப்பு 
செய்திகள்

20 நாட்களாக பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த கார் டிரைவர்

ஈரோட்டில் பூட்டிய வீட்டுக்குள் கிடந்த கார் டிரைவரின் உடலில் துர்நாற்றம் வீசியதால் 20 நாட்களாக பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

மாலை மலர்

ஈரோடு திண்டல் மாருதி நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு விட்டு உள்ளார். அந்த வீட்டின் மேல் மாடியில் ஒரு வீட்டில் பூபதி (வயது 53) என்பவர் தங்கி இருந்தார். வாடகை கார் டிரைவரான இவர் தனியாக தங்கி இருந்தார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்த அவர், பின்னர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்தநிலையில் நேற்று காலை அவர் குடியிருந்த கட்டிடத்தில் உள்ள கீழ் வீட்டில் வேலை செய்து வரும் பெண் ஒருவர் துணிகளை காய வைக்க மொட்டை மாடிக்கு சென்றார். அப்போது மாடியில் பூபதி தங்கி இருந்த வீட்டின் உள்ளே இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வேலைக்கார பெண், வீட்டு உரிமையாளரிடம் தகவல் தெரிவித்து உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வீட்டு கதவை உடைத்து பார்த்தனர். அப்போது டிரைவர் பூபதி படுத்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து பூபதியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பூபதி ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. டிரைவரான இவருக்கு ராதா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் -மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பூபதி மனைவி மற்றும் மகன்களை பிரிந்து மாருதிநகரில் தனியாக வசித்து வந்தார்.