சத்திரப்பட்டி:
சத்திரப்பட்டி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி நடுவீதியை சேர்ந்தவர் முருகராஜ் (வயது 50). விவசாயி. இவர் நேற்று குடும்பத்துடன் பொருளூரில் உள்ள மங்கையம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட தனது காரில் சென்றார். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு அவர்கள் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
காரை முருகராஜ் ஓட்டினார். வீரக்காவலசு பகுதியில் உள்ள வளைவில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய முருகராஜ், அவரின் தந்தை திருஞானம் (75), தாய் பழனியம்மாள் (70), மனைவி புஷ்பா (45), மகள் தாரணி (17) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த சத்திரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.