கார் கவிழ்ந்து கிடக்கும் காட்சி. 
செய்திகள்

அவினாசி அருகே கார் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்

அவினாசி அருகே கார் தலை குப்புற கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாலை மலர்

அவினாசி:

ஈரோடு வீரப்பன்சத்திரம் எம்.ஜிஆர்.வீதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 50). இவர் தனது மனைவி கோமதி (45), மகன்கள் கோகுல் (25), ஆதித்தன் (23) ஆகியோருடன் ஒரு காரில் நேற்று மாலை கோவையிலிருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த கார், இரவு 8 மணியளவில் அவினாசியை அடுத்த பழங்கரை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது இவரது காருக்கு பின்னால் மற்றொரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த கார் திடீரென்று வெங்கடாசலம் ஓட்டிச்சென்ற கார் மீது மோதியது. இதனால் வெங்கடாசலம் சென்ற கார் நிலை தடுமாறி ரோட்டில் தலை குப்புற கவிழ்ந்து அப்பளம்போல் நொறுங்கியது.

இதில் வெங்கடாசலம், கோமதி, கோகுல், ஆதித்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெருமாநல்லுரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இது பற்றிய தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் விரைந்து சென்று காரை அப்புறப்படுத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.