விபத்து 
செய்திகள்

கார்- மொபட் மோதல்: 2 பேர் நசுங்கி பலி

கோவையில் கார்- மொபட் மோதிய விபத்தில் 2 பேர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை:

கோவை மதுக்கரை மார்க்கெட் தெற்கு மார தோட்ட வீதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சந்தோஷ் குமார் (21). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு இவர் தனது மொபட்டில் செட்டிபாளையத்தில் உள்ள ராயர் ஆத்தூர் கோவிலுக்கு சென்றார். சந்தோஷ் குமாருடன் அவரது தாத்தா முருகசாமியும் (75) சென்றார்.

இந்த மொபட் செட்டிப்பாளையம்- மலுமிச்சம் பட்டி சாலையில் சிட்கோ பாலம் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது வேகமாக வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் சந்தோஷ் குமார், முருகசாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

காரை ஓட்டி வந்த குறிச்சி சரவணன் நகரை சேர்ந்த ஞானசெல்வன் (37) காயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

விபத்தில் பலியான சந்தோஷ்குமார், முருகசாமி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் நீலகிரி மாவட்டம் முத்த உரையை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி ராதிகா (35). நூலக உதவியாளர். சம்பவத்தன்று இவர் பெரிய நாயக்கன் பாளையத்தில் நடந்து சென்றார்.

அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ராதிகா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் போராடினார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே ராதிகா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.