செய்திகள்

திண்டிவனம் அருகே கார் மோதி மொபட்டில் சென்ற ஆசிரியை பலி

திண்டிவனம் அருகே மொபட் மீது கார் மோதியதில் ஆசிரியை படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

மாலை மலர்

திண்டிவனம் அண்ணா நகர் மரக்காணம் ரோட்டை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மனைவி விண்ணரசி (வயது 47). இவர் திண்டிவனம் அருகே உள்ள ஆலகிராமம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார்.

தினமும் பள்ளிக்கு விண்ணரசி மொபைட்டில் செல்வது வழக்கம். இந்த நிலையில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்வதற்காக விண்ணரசி தனது மொபைட்டில் புறப்பட்டார். கருணாவூர்பேட்டை பகுதியில் திண்டிவனம்-சென்னை புறவழிச்சாலையில் மொபைட் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த கார் விண்ணரசி சென்ற மொபைட் மீது எதிர்பாராதவிதமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் காரின் நம்பர் பிளேட் கீழே விழுந்தது.

இந்த விபத்தில் விண்ணரசி தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விண்ணரசி பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரின் நம்பர் பிளேட்டை வைத்து கார் யாருடையது? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.