செய்திகள்

மேலூர் அருகே கார் மோதி பெண் உடல் நசுங்கி பலி

மேலூர் அருகே கார் விபத்தில் சிக்கியதில் பெண் பலியானார். கர்ப்பிணி உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.

மாலை மலர்

மேலூர்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி கார்த்திகா (வயது 45). இவருக்கு தமிழரசன் (29) என்ற மகனும், சித்ரகலா (21) என்ற மகளும் உள்ளனர். இதில் சித்ரகலாவுக்கு திருமணமாகிவிட்டது. தற்போது அவர் கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் நாகபட்டிணத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கார்த்திகா தனது மகன், மகளுடன் காரில் சென்றார். விழா முடிந்து நேற்று இரவு ஊர் திரும்பினர். காரை தமிழரசன் ஓட்டி வந்தார்.

இன்று அதிகாலை மதுரை மேலூர் அருகே 4 வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. மலம்பட்டி அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதில் காரின் முன்பகுதி கடும் சேதமடைந்தது.

காரில் இருந்த கார்த்திகா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தமிழரசன், சித்ரகலா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த சுங்கச்சாவடி வாகன மீட்பு அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய 2 பேரை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரின் நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.