தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் , அதியமான் கோட்டை அடுத்துள்ள ஏலகிரியான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 42). இவர் வட்டார வள மையத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்றுனராக இருந்து வந்தார். இவருக்கு பரிமளா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் பாலகிருஷ்ணன் இன்று காலை உடற் பயிற்சிக்காக சைக்கிளில் சேலத்தில் இருந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள தடங்கம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பெங்களூரில் இருந்து வந்து கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக பாலகிருஷ்ணன் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பாலகிருஷ்ணன் பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் பாலகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பாலகிருஷ்ணன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.