பவித்ரா 
செய்திகள்

சூளைமேட்டில் புதுப்பெண் ஓட்டிய கார் மோதி சிறுமி பலி

சூளைமேட்டில் புதுப்பெண் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து சிறுமி மீது மோதிய விபத்தில் சிறுமி பலியானார். இது குறித்து அவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

சூளைமேடு வன்னியர் 2-வது தெருவை சேர்ந்தவர் துரை வேலன். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது மகள் பவித்ரா (7).

நேற்று இரவு 9 மணி அளவில் பவித்ரா வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அப்பகுதியை சேர்ந்த பிரீத்தி என்ற பெண் தனது காரை எடுத்தார். இந்த நேரத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. இதில் அங்கு நின்று பின்னால் சென்று கொண்டிருந்த இன்னொரு கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் 2 கார்களுக்கு நடுவில் பவித்ரா சிக்கினாள். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பவித்ராவை அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் அழைத்து சென்றனர். அதற்குள் அவளது உயிர் பிரிந்துவிட்டது.

பவித்ராவின் தாய் ஜெயந்திக்கு நேற்று பிறந்த நாள் ஆகும் தாயின்பிறந்த நாள் அன்று ஆசையாய் வளர்த்த மகள் திடீரென வீட்டு அருகே நடந்த விபத்தில் கார் மோதி பலியான சம்பவம் சூளைமேடு பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று சிறுமி பவித்ராவின் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரீத்தி கைது செய்யப்பட்டார். திருமணமாகி 1½ மாதங்களே ஆகியுள்ள நிலையில் கணவர் டேனியுடன் வெளியில் செல்வதற்காக பிரீத்தி காரை எடுத்துள்ளார். அப்போது தான் கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடி சிறுமியின் உயிரை பறித்துள்ளது.

அதே நேரத்தில் கணவர் கார் ஓட்டுவதற்காக பிரீத்திக்கு பயிற்சி அளித்த போதுதான் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது அதனை மறுத்தனர். 2 ஆண்டுகளுக்கு முன்பே பிரீத்தி ஓட்டுனர் பயிற்சி பெற்றிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். #tamilnews

SCROLL FOR NEXT