செய்திகள்

காவலர் உடற்தகுதி தேர்வில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காவலர் உடற்தகுதி தேர்வில் பங்கேற்ற ஒருவர், நெடுந்தொலைவு ஓட்டத்தின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #CandidateDies

ஜாம்ஷெட்பூர்:

ஜார்க்கண்டில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஜூலை 2-ம் தேதி தொடங்கிய இந்த பணி, ஜூலை 21-ம் தேதி வரை நடக்கிறது.

ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரில் சித்கோரா பகுதியில் ஜே.ஏ.பி. மைதானத்தில் நடந்த உடற்தகுதி தேர்வில் ஒரு மணி நேரத்திற்குள் 10 கிலோ மீட்டர் தொலைவு ஓடும்படி தேர்வுக்கு வந்திருந்தவர்களிடம் கூறப்பட்டு உள்ளது. தேர்வில் கலந்து கொண்ட பொகாரோ பகுதியை சேர்ந்த ராஜேஷ் குமார் ஷா (வயது 26) உள்பட 5 பேர் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளனர். அவர்கள் எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் ஷா உயிரிழந்து விட்டார்.

அவர் 23வது அல்லது 24வது சுற்றில் மயங்கி விழுந்து இருக்க கூடும் என போலீஸ் சூப்பிரெண்டு பிரபத் குமார் கூறியுள்ளார்.  நீர்ச்சத்து இல்லாதது அவருக்கு உடல்நலக்குறைவை ஏற்படுத்தி இருக்கக் கூடும்.  எனினும், உடற்கூறாய்வுக்கு பின்பே சரியான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது.

டெல்லியில் பணிபுரிந்து வந்த ஷா நேராக தேர்வு நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார் என்று போலீசார் ஒருவர் கூறியுள்ளார். #CandidateDies

SCROLL FOR NEXT