செய்திகள்

திருப்பதியில் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை - சந்திரபாபுநாயுடு, ரத்தன் டாடா அடிக்கல் நாட்டினர்

திருப்பதியில் ரூ.1000 கோடியில் அமையும் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு மற்றும் ரத்தன் டாடா ஆகியோர் அடிக்கல் நாட்டினர். #ChandrababuNaidu

மாலை மலர்

திருப்பதி:

திருப்பதியில் இருந்து திருமலை செல்லும்பாதையில் அலிபிரி அருகே வனவிலங்குகள் சரணாலயம் (எஸ்.வி.ஜூ பார்க்) அமைந்துள்ளது. இதன் அருகே 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.1000 கோடியில் வெங்கடேஸ்வரா புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு நேற்று காலை கண்ணவரத்திலிருந்து விமானத்தில் புறப்பட்டார். அவரது விமானம் ரேணிகுண்டா விமான நிலையத்தில் 11.20-க்கு தரை இறங்கியது. விமானத்தில் இருந்து இறங்கிய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு கலெக்டர் பி.எஸ்.பிரதியும்ணா, டி.ஐ.ஜி. (பொறுப்பு) ஜி.சீனிவாஸ், திருமலை தேவஸ்தான இணை அதிகாரி சீனிவாசராஜூ, விமான நிலைய இயக்குனர் புல்லா நானி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வெங்கடேஸ்வரா புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை அமைய உள்ள இடத்துக்கு சென்று இறங்கினார். விழாவில் பங்கேற்பதற்காக தொழில் அதிபர் ரத்தன் டாடாவும் வந்திருந்தார்.

ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நாராயணா, துணை கலெக்டர் பி.எஸ்.கிரீஷா, புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் மஹந்தி, சுகுணம்மா எம்.எல்.ஏ., ரஷ் மருத்துவமனை இயக்குனர் சிப்பாயி சுப்பிரமணியம் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் நடந்த விழாவில் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு பூமி பூஜை நடந்தது. இதில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ரத்தன் டாடா ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அடிக்கல் நாட்டப்பட்டது. முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத்தன்டாடா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவிலில் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டு லட்டு மற்றும் தீர்த்த பிரசாதத்துடன் வெங்கடாசலபதி படமும் வழங்கப்பட்டது. #ChandrababuNaidu