செய்திகள்

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டிய 64 ஆயிரம் பேரின் லைசென்ஸ் ரத்து

தமிழகம் முழுவதும் மோட்டார்சைக்கிளில் செல்போன் பேசிக் கொண்டே சென்ற 64,105 பேர் அவர்களது ஓட்டுனர் உரிமத்தை போக்குவரத்து துறை அதிகாரிகள் ரத்து செய்தனர். #TamilNadu #License #DrivingLicense

மாலை மலர்

சாலை விபத்து உயிர் இழப்பில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதால் அவற்றை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது சாலை விபத்தில் தமிழகத்தில் தான் ஒவ்வொரு ஆண்டும் அதிகளவு உயிர் இழப்பு இருந்து வருகிறது.

அதனை குறைக்க போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் சாலை விபத்தை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் விதிகளை மீறும் டிரைவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் விபத்து குறைந்து வருகிறது.

வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசி செல்லுதல், ஹெல்மெட் அணியாமல் ஓட்டுதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், வாகனங்களில் அதிகளவு சரக்குகளை ஏற்றி செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல் போன்ற போக்குவரத்து விதிகளை மீறும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையுடன் போலீசாரும் இணைந்து எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையால் சாலை விபத்து கணிசமாக குறையத் தொடங்கியுள்ளது.

வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசிக் கொண்டே ஓட்டி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து கமி‌ஷனர் சி.சமயமூர்த்தி நடவடிக்கை எடுக்க அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அதனையடுத்து போக்குவரத்து துறை அதிகாரிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்றாத உங்களின் லைசெலன்சை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின்னர் ஓட்டுனர் உரிமத்தை 6 மாதத்திற்கு ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

லாரி, வேன், கார் டிரைவர்கள் இரு சக்கர வாகன ஓட்டிகள் என சுமார் 2 லட்சம் பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கமி‌ஷனர் சமயமூர்த்தி கூறியதாவது:-

சாலை விபத்து மற்றும் உயிர் இழப்பை குறைக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் போலீசாருடன் இணைந்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வருடம் 57,158 பேர் மீது ஓட்டுனர் உரிமம் ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 19,422 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்ற குற்றத்திற்காக 29,964 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே போல சிவப்பு சிக்னல் விழுந்த பின்னர் வாகனத்தை ஓட்டிச் சென்றதாக 18,287 பேர் மீது லைசென்ஸ் ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்றதாக 17,701 பேர் மீதும், வாகனத்தில் அதிகளவு சரக்குகளை ஏற்றி சென்றதாக 7,223 பேர் மீதும் லைசென்சு ரத்து நடவடிக்கை பாய்ந்துள்ளது.

ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டவர்களின் விவரம் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு விடும். அவர்களது லைசென்சு முடக்கம் செய்யப்பட்ட தகவல் குறிப்பிடப்பட்டிருக்கும்.

லைசென்சு செயலில் உள்ளதா? தடை செய்யப்பட்டு இருக்கிறதா? என்பது போன்ற விவரங்கள் உரிமம் ரத்து செய்யப்பட்டவர்களின் தகவல் குறிப்பில் இடம் பெறும். லைசென்ஸ் “பார் சோடு” வழியாக அதனை கண்டறிந்து விடலாம்.

இந்த நடவடிக்கையின் மூலம் சாலை விபத்து படிப்படியாக குறைந்து வருகிறது.