எல்-சல்வடார் நாட்டைச் சேர்ந்த ஆஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ் மற்றும் அவரது 2 வயது மகள் ஆங்கி வலேரியா ஆகியோர் அமெரிக்காவில் குடியேறும் முயற்சியின்போது ஆற்றில் மூழ்கி இறந்து, கரை ஒதுங்கிய புகைப்படம் உலகை உலுக்கியது.
இந்த புகைப்படம் அமெரிக்காவில் தஞ்சமடையும் அகதிகள் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை உணர்த்துவதாக அமைந்தது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கெடுபிடிகளால்தான் தந்தையும், மகளும் இறந்ததாக சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கனடாவைச் சேர்ந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் மைக்கேல் டி ஆட்டர், தந்தை, மகள் ஆற்றில் மூழ்கி இறந்தது தொடர்பாக டிரம்பை சாடி கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்தார்.
கோல்ப் மைதானத்தில் இருக்கும் டிரம்ப் ஆற்றில் கரை ஒதுங்கிய ஆஸ்கர் அல்பெர்டோ மற்றும் அவரின் மகளின் உடலை பார்த்து, “நான் விளையாடுவதைப் பார்த்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா?” என்று கேட்பதுபோல் அந்த கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது.