செய்திகள்

300 ரூபாய் பஸ் கட்டணத்தில் சென்னையை சுற்றி பார்க்கலாம்: சுற்றுலா துறை ஏற்பாடு

ரூ.300 பஸ் கட்டணத்தில் சென்னையை சுற்றிப் பார்க்க சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

இது தொடர்பாக தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை, பிர்லா கோளரங்கம், வள்ளுவர் கோட்டம், பாம்பு பண்ணை, மயிலாப்பூர் கபாலீசுவர் கோவில், மெரினா கடற்கரை, முட்டுக்காடு படகு குழாம், கோவளம் ஆகிய இடங்களுக்கு அரை நாள் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சுற்றுலாவுக்கு தினமும் காலை 8 மணி முதல் 1 மணி வரையிலோ அல்லது பகல் 1.30 மணி முதல் மாலை 6.30 மணிவரையிலோ பயணிகள் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

இதற்கு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்கும் நவீன பஸ்களில் ஒருவருக்கு ரூ.300 கட்டணம் ஆகும். ஏசி பஸ்சில் ரூ.375 கட்டணம்.

மேலும் ஒரு நாள் சுற்றுலாவாக கோவளம், மாமல்லபுரம், காஞ்சீபுரம், முட்டுக்காடு படகு இல்லம், விஜிபி தங்க கடற்கரை ஆகிய இடங்களுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

மாங்காடு, திருவேற்காடு, பூந்தமல்லி, திருமுல்லைவாயல், செம்புலிவரம், பஞ்சட்டி, மேலூர் திருவுடையம்மன் ஆகிய அம்மன் கோவில்களுக்கு ரூ.550 கட்டணத்தில் ஆன்மீக சுற்றுலா செல்லலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.