செய்திகள்

உள்ளாட்சி குறைபாட்டால் ரூ.84 கோடி இழப்பு- தணிக்கை அறிக்கையில் தகவல்

உள்ளாட்சிகளில் நிர்வாக குறைபாடு காரணமாக அரசுக்கு ரூ.84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #CAGreport

உள்ளாட்சிகளில் நிர்வாக குறைபாடு காரணமாக அரசுக்கு ரூ.84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகத்துக்கு சப்பாத்தி தயாரிக்கும் 9 நவீன எந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அவை முழுமையாக செயல்படவில்லை. ஒப்பந்ததாரர் அதை சரி செய்யவில்லை. இதனால் ரூ.1.33 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சியில் புதிய பஸ்நிலையம், சுங்க வசூல் குத்தகை கட்டணத்தை வசூலிக்கவில்லை.

சேலம் மாநகராட்சியில் உணவு கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ஒப்பந்ததாரர் முடிக்காமல் இருப்பது உள்பட பல்வேறு செயல்களில் சென்னை தவிர இதர மாநகராட்சிகளில் ரூ.25.65 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

நிர்வாக குறைபாடு காரணமாக நகராட்சிகளில் ரூ.25.82 கோடி, பேரூராட்சிகளில் ரூ.13.45 கோடி, மாவட்ட ஊராட்சிகளில் ரூ.1.38 கோடி, ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.5.29 கோடி, கிராம ஊராட்சிகளில் ரூ.1.15 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் ரூ.84 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.