போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம். 
செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் கேபிள் ஆபரேட்டர்கள் முற்றுகை போராட்டம்: 300 பேர் கைது

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய கேபிள் ஆபரேட்டர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை பேட்டையை சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் சந்திரசேகர் மீது அரசு கேபிள் தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இதனை கண்டித்தும், சந்திரசேகர் மீது பதிந்த வழக்கை வாபஸ் பெறக்கோரியும் நெல்லை கலெக்டர் அலுவலகத்தின் முன்பு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் இருந்து 30 மாவட்டங்களைச் சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், “சந்திரசேகர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அவர் மீது புகார் கூறிய தாசில்தார் தற்போது இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறப்பட்டிருந்தது. மனுவை கொடுத்துவிட்டு திரும்பிய அவர்கள் கலெக்டர் அலுவலக வாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கேபிள் டி.வி. சங்க மாநில நிர்வாகிகள் ஆறுமுகம், விஷ்ணுராம், சேகர், ரமேஷ், கில்ட்பாண்டி உள்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.