செய்திகள்

இலங்கையில் ஜாகீர் நாயக்கின் பீஸ் டி.வி. ஒளிபரப்பு நிறுத்தம் - 800 வெளிநாட்டினரை வெளியேற்ற வலியுறுத்தல்

இஸ்லாமிய பிரசாரகர் ஜாகீர் நாயக்கின் ‘பீஸ் டி.வி.’ ஒளிபரப்பை இலங்கையில் உள்ள பிரதான கேபிள் ஆபரேட்டர்கள் நிறுத்தியுள்ளனர். மதரசாக்களில் உள்ள 800 வெளிநாட்டினர் வெளியேற வலியுறுத்தப்பட்டுள்ளது. #SriLankablock #ZakirNaik #PeaceTV

மாலை மலர்

கொழும்பு:

வங்காளதேசத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பிரபல இஸ்லாமிய பிரசாரகர் ஜாகீர் நாயக்கின் பேச்சு தூண்டுகோலாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

மலேசியா நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள ஜாகிர் நாயக்கின் அமைப்பு மற்றும் அவர் நடத்திவரும் ‘பீஸ் டி.வி.’ சேனல் ஆகியவற்றுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவிச் செய்த குற்றச்சாட்டுகளின் பேரில் இந்தியாவில் இருக்கும் அவரது சில அலுவலகங்கள் மற்றும் சொத்துகளை தேசிய புலனாய்வு அமைப்பு முடக்கி வைத்துள்ளது. மேலும், ஜாகிர் நாயக் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று 253 உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களையடுத்து  ஜாகீர் நாயக்கின் ‘பீஸ் டி.வி.’ ஒளிபரப்பை இலங்கையில் உள்ள இரு பிரதான கேபிள் ஆபரேட்டர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதற்கிடையில், சுற்றுலா விசா மூலம் இலங்கைக்குள் நுழைந்து இங்குள்ள இஸ்லாமிய மதரசாக்களில் போதகர்களாக இருக்கும் சுமார் 800 வெளிநாட்டினரை உடனடியாக நாடுகடத்த வேண்டும் என பெருநகர மற்றும் மேற்கத்திய மேம்பாட்டுத்துறை மந்திரி பாட்டாலி சம்பிக்க ரனவக்க இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார். #SriLankablock #ZakirNaik #PeaceTV