கௌதம் அதானி, அவரது உறவினர் அவரது உறவினர் சாகர் அதானி மற்றும் அதானி கிரீன் எனர்ஜி முன்னாள் சி.இ.ஓ வினீத் ஜெயின் ஆகியோர் மீதான லஞ்சம் மற்றும் மோசடி வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதையடுத்து இன்று இந்திய பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் வெவ்வேறு நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.
வர்த்தகத் தொடக்கத்தில் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 1.7% வரை உயர்ந்தது.
அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் பங்கு காலை வர்த்தகத்தில் 2%க்கும் மேல் உயர்ந்து. அதிகபட்சமாக ரூ.1,670 வரை உயர்ந்தது.
அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி பவர் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.
2024ஆம் ஆண்டு நவம்பரில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகச் சுமத்தப்பட்ட குற்றவியல் வழக்கை அமெரிக்க நீதிமன்றம் நிரந்தரமாகத் தள்ளுபடி செய்துள்ளது.
அமெரிக்க அரசின் நீதித்துறை வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தது. இதற்கு பிரதிபலனாக அதானி அமெரிக்காவில் முதலீடு செய்ய உள்ளாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அதை அரசு தரப்பு மறுத்தது. மேலும் அதானி தரப்பும் நீதிமன்ற உத்தரவுப்படி, எந்த பிரதிபலனும் செய்யவில்லை என உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தார்.
இதற்கிடையில், அதானிக்கு எதிரான இறுதித் தீர்ப்பின் மூலம், அமெரிக்க பங்குச்சந்தை வாரியமான 'செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன்' (SEC) தொடர்ந்திருந்த சிவில் வழக்கும் முடிவுக்கு வந்துள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளாமலும், அதே நேரம் மறுக்காமலும் அவர் இந்த உத்தரவை ஏற்றுக்கொண்டார். இத்தீர்ப்பின்படி, அதானி 30 நாட்களுக்குள் SEC-க்கு 6 மில்லியன் டாலர் சிவில் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும்.
இந்தத் தீர்ப்பு குறித்து கௌதம் அதானி, "நீதித்துறை நடவடிக்கைகளை மிகுந்த பணிவுடனும் மரியாதையுடனும் வரவேற்கிறேன். இந்தச் சவாலான காலத்தில், உண்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியின் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கை குலையவில்லை. எங்கள் மீதும், நாட்டின் நீதித் துறை மீதும் நம்பிக்கை இழக்காத அனைவருக்கும் என் நன்றிகள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.